பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மாணவர்களை பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த வேண்டி உள்ளதால் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் இருந்து முதுகலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆ.ராமு தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

தமிழகத்தில் கரோனா பரவலால் கடந்த 10 மாதங்களாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன.

ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல்கட்டமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து 9, 10, பிளஸ் 1 மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 9, 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

உயர் கல்வி படிக்கச் செல்லும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் உறுதியாக அரசு பொதுத்தேர்வு மே 3-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி நிறைவடையும் என்று தேர்வுத் துறையால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுத்தேர்வுக்கு முன்னதாக விரைவாக பாடங்களை நடத்தி முடிக்கவும், பொதுத்தேர்வு சார்ந்த செய்முறைத் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியும் உள்ளது.

மேலும், மாணவர்களை பொதுத்தேர்வுக்கு ஆயத்தப்படுத்த வேண்டி இருப்பதால் பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் இருந்து முதுகலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in