Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
மிகவும் பிரசித்தி பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழா நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்தாண்டு விடுபட்ட பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, சிவ யாகம், பஞ்சமூர்த்திகள் உள்புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி உள்புறப்பாடு நடைபெற உள்ளது.
மார்ச் 7-ம் தேதி காலை 6.30 மணிக்கு சிறிய தேரில் சந்திரசேகரர் முதல் சுற்று யாக விக் ஷணம், 2-வது சுற்று தேர் உள்புறப்பாடு, 3-வது சுற்று பரிவேஷம் நடைபெற உள்ளது.
10-ம் தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம், கொடியிறக்கம் நடைபெறும். அதைத்தொடர்ந்து, 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT