புதுச்சேரி, காரைக்காலில் 9,10,11-ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தத் திட்டம்: ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

புதுச்சேரி சட்டசபைக்கு முதன் முறையாக வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி சட்டசபைக்கு முதன் முறையாக வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். படம்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

தமிழகத்தில் 9, 10,11-ம் வகுப்பு களுக்கு நடப்பாண்டில் தேர்வுகள் இன்றி அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அதே பாடத் திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி, காரைக்காலில் தேர்வு நடத்த திட்டமிட்டிருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளு நர் தமிழிசை நேற்று மாலை சட்டப்பேரவைக்கு வந்தார். சட்டப்பேரவை படிக்கட்டுகளை தொட்டுவணங்கி, முதல்வர் அலுவலகத்தை தாண்டி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் அறைக்குச் சென்றார்.கேபினட் அறையில் தலை மைச்செயலர் அஸ்வனிகுமார், மத்திய உள்துறையால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் சந்திரமவுலி உள்ளிட்டோருடன் ஆலோசித்தார். கூட்டம் சுமார் ஒருமணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது:

பள்ளி குழந்தைகளுக்கு மதியஉணவு திட்டம் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. நேற்று முதல் 2,400 குழந்தைகள் மதிய உணவு எடுத்துள்ளனர். காலையில் பள்ளிக்குழந்தைகளுக்கு பால் தருவது நிறுத்தப்பட்டிருந்தது. இன்று காலை முதல் பால் தரப்படும். குழந்தைகளுக்கு படிப்புக்கு தேவையானது அனைத்தும் தரப்படும்.

தமிழகத்தில் 9, 10,11-ம் வகுப்புகளுக்கு தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி என்று தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் தேர்தலுக்கு பின்னால் தேர்வு தேதி வைக்கலாமா என ஆலோசனை செய்து வருகிறோம். தேர்வு தேதியை மாற்றி அமைக்க உள்ளோம். அதை தற்போது அறிவிக்க முடியாது. தேர்தல் தேதியை மனதில் வைத்து தேர்வு தேதியை மாற்றி வைக்க ஆலோசிக்கிறோம்.

தமிழகம் இவ்விஷயத்தில் கொள்கை முடிவு எடுத்துள்ளது. புதுச்சேரியில் உள்ள மாணவர்க ளுக்கு தேர்வு நடத்தலாம். ஏனெனில் கடந்த அக்டோபர் முதல் பள்ளிக்குச் செல்கிறார்கள். தேர்வைப் பிறகு நடத்துவது பற்றி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளோம். தேர்வு நடத்தப்பட் டாலும், புதுச்சேரியில் தேர்வில் முதலில் இருந்த பழைய முறையே தொடரும். அதில், குழப்பம் இல்லை.

குழந்தைகள் படிக்க வேண்டும். இங்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவார்கள். தேர்வு தேதியை மாணவர்களுக்கு வசதியாக அறிவிப்போம். இதில் பெற்றோர், மாணவர்கள் ஏதும் கோரிக்கை வைப்பார்களா என்று பார்ப்போம்" என்று தெரிவித்தார்.

தமிழக கல்வித் துறையின் பாடத் திட்டத்தையே புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் கல்வித் துறை பின்பற்றி வருகிறது. பொதுத் தேர்வுகளில் ஆண்டு தோறும் தமிழகத்தையொட்டி அதே நாளில் தேர்வு நடத்தப்படும். சான்றிதழும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in