Published : 01 Mar 2021 05:26 PM
Last Updated : 01 Mar 2021 05:26 PM

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மாலத்தீவு கடற்படையினரால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து சென்ற 8 மீனவர்களை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரையில் இருந்து ஹெமில்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு கடந்த 12-ம் தேதி தங்குகடல் மீன் பிடிக்கச் சென்றது.

படகில், தூத்துக்குடி மாவட்டம் சவேரியார்புரத்தை சேர்ந்த ஜான் (25), பாரத்(22), ராஜா(40), தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டியை சேர்ந்த ராபின்(30), அபிஷேக்(19), ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த ராஜ்(45), வசந்த்(35), வினித்(22) ஆகிய 8 பேர் இருந்தனர். அவர்கள் கடந்த 27-ம் தேதி தருவைகுளம் திரும்ப வேண்டும்.

இதற்கிடையே, கன்னியாகுமரியில் இருந்து தென்திசையில் 270 கடல் நாட்டிகல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மாலத்தீவு கடற்படையினர் கைது செய்து, படகுடன் அவர்களை மாலத்தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த மீனவர்களின் உறவினர்கள் மற்றும் தருவைகுளம் தூய மிக்கேல் விசைப்படகு பருவலை தொழில்புரிவோர் முன்னேற்ற சங்க தலைவர் அந்தோணி பன்னீர்தாஸ், நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

மனுவில், எங்கள் சங்கத்தை சேர்ந்த அந்தோணி மிக்கேல் கெமில்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 12-ம் தேதி 8 மீன்பிடி தொழிலாளர்கள் தருவைகுளத்தில் இருந்து கடலுக்கு சென்றனர்.

கன்னியாகுமரி தென்திசையில் மீன்பிடித்தொழில் செய்து கொண்டிருந்தபோது, அதிவேக நீரோட்டத்தின் காரணமாக எதிர்பாராதவிதமாக மாலத்தீவின் எல்லை அருகே விசைப்படகு சென்றுவிட்டது.

அங்கே வந்த மாலத்தீவு ரோந்துப்படகு விசைப்படகையும், அதிலிருந்த 8 மீனவர்களையும் மாலத்தீவுக்கு கொண்டு சென்றுவிட்டனர். எனவே, விசைப்படகையும், அதில் பணிபுரிந்த 8 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x