

திருத்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளின் பட்டியல் இன்று வெளியாகும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் அதிகாரிகளாகவும், உதவி தேர்தல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டவர்கள், தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்காமல் இடமாற்றம் செய்ததற்குத் தடை கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்காக, மாவட்டத் தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து, கடந்த ஜனவரி 21-ம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், அந்த அறிவிப்பில் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளின் முகவரி, கைபேசி எண், வாட்ஸ் அப் எண், மின்னஞ்சல் முகவரி என்பன போன்ற தொடர்பு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும், இது சம்பந்தமாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பியதாகவும் கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி, பொதுத்துறை இணையதளத்தில், 234 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த தேர்தல் அதிகாரிகள், தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்காமல், உள்நோக்கத்துடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை இடமாற்றம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பிறப்பித்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த அறிவிப்பை ரத்து செய்து, குறைகளைக் களைந்து புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று (மார்ச் 1) விசாரணைக்கு வந்தபோது, புதிய பட்டியல் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும், அதைச் சரிபார்த்துத் தெரிவிக்கலாம் எனவும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர்கள் பணிமாற்றம் செய்யப்படுவது உண்டு எனவும், அந்த வகையில் இவர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புதிய பட்டியலைச் சரிபார்க்க மனுதாரருக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு (மார்ச் 3) தள்ளிவைத்தனர்.