Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

முதியவர்கள், நோயாளிகளுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி; தமிழகம் முழுவதும் 1,290 இடங்களில் ஏற்பாடு: தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் நிர்ணயம்

சென்னை

தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 59 வயது வரைபல நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றுக்காக முன்களப் பணியாளர்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் அரசு, தனியார் என 166 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. முதல் தவணை முடிந்து 28 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இணையதளத்தில் முன்பதிவு

இந்நிலையில், மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மார்ச் 1 (இன்று)முதல் தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையுள்ள பல நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு www.cowin.gov.in என்ற இணையதளத்தில் காலை 9 மணி முதல் தொடங்கும்.

தமிழகம் முழுவதும் 529 அரசு மருத்துவமனைகளிலும் 761 தனியார் மருத்துவமனைகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக போடப்படும். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ரூ.150, சேவைக்கட்டணம் ரூ.100 என ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செயலிகள்

தடுப்பூசி போட்டுக்கொள்ள கோ-வின் 2.0 செயலி (COWIN 2.0 APP) உருவாக்கப்பட்டுள்ளது. முதியவர்கள் தங்கள் வயது சான்றுக்காக ஆதார், ஓய்வூதிய அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை என ஏதாவது ஒரு அடையாள அட்டையை இதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நோயாளிகள் கூடுதலாக, பதிவுபெற்ற மருத்துவரிடம் இருந்து பெற்ற சான்றிதழையும் பதிவேற்ற வேண்டும். ‘ஆரோக்கிய சேது’ செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தடுப்பூசி போடப்படும் மையம், தேதி, நேரம் ஆகியவை செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும். தானாகவே பதிவு செய்யமுடியாதவர்கள் உரிய ஆவணங்களுடன் அருகே உள்ள தடுப்பூசி மையத்துக்கு செல்ல வேண்டும்.

அவர்கள் செயலியில் பதிவுசெய்து தடுப்பூசி போடுவார்கள். கூட்டம் அதிகம் இருந்தால், பதிவுசெய்து குறிப்பிட்ட தேதியில் தடுப்பூசி போடப்படும். அதன்பின் 2-ம்தவணை தடுப்பூசி போட வேண்டியது குறித்த தகவல் குறுஞ்செய்தியாக செல்போன் எண்ணுக்கு வரும்.

நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இயங்கும் 10,000-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், மத்திய அரசின்சுகாதார திட்டத்தில் இணைந்துள்ள 600-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், மாநில திட்டங்களின் கீழ் சேர்ந்துள்ள இதர தனியார் மருத்துவமனைகளும் கரோனா தடுப்பூசி மையங்களாக செயல்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x