Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

தேர்தல் பாதுகாப்பு பணியின்போது பிற துறையினருடன் இணைந்து செயல்படுங்கள்: போலீஸாருக்கு காவல் ஆணையர் அறிவுரை

மகேஷ் குமார் அகர்வால்

சென்னை

தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியின்போது பிற துறையினருடன் காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் போலீஸாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்துள்ளது.

தேர்தல் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட துணை ராணுவப்படை வீரர்களும் தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து கவர்வதை தடுக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸார் பல்வேறு இடங்களில் தடுப்புகளை அமைத்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

இந்நிலையில், சென்னையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வியூகம் குறித்து காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று மதியம் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநகராட்சி உட்பட பிற துறையினருடன் காவல்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கூட்டத்தில் கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x