Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

புதுச்சேரியில் ரூ.15 லட்சம் போதைப் பொருட்கள் லாரியுடன் பறிமுதல்

புதுச்சேரியில் ரூ.15 லட்சம் என மதிப் புள்ள போதை பாக்கு, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உரிய ஆவணங்களின்றி பணம், பரிசு பொருட்கள் எடுத்துச் செயல்லக்கூடாது. மீறி எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி வணிக வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி பாரதி வீதி, மொந்தி ரேஸ் வீதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி அதிலிருந்து சில மூட்டைகளை இறங்கி, அதனை சிறிய லாரிகளில் சிலர் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

இதைக்கண்ட வணிக வரித்துறை அதிகாரிகள் அந்த லாரி ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில் ஓசூரில் இருந்து ஏற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை சோதனை செய்ததில் சைக்கிள்,டேபிள், பெட்டிகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்தன. மேலும் ஒரு பண்டல் தடை செய்யப் பட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. உடனே ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆய்வாளர் மனோஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அதில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு இருப்பது தெரியவந்தது. உடனே போலீஸார் அந்த கண்டெய்னர் லாரியை ஒதியஞ் சாலை காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனர். இரவு நேரம் என்பதால் சோதனை நடத்தாமல் அங்கேயே நிறுத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை கிழக்கு பகுதி எஸ்பி ரச்சனா சிங், ஒதியஞ்சாலை ஆய்வாளர் மனோஜ், வணிக வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அந்த கண்டெய்னர் லாரியில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த லாரியில் மூட்டை, மூட்டையாகவும், பெட்டி பெட்டியாகவும் போதை பாக்கு, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x