Published : 28 Feb 2021 07:53 PM
Last Updated : 28 Feb 2021 07:53 PM

வாக்கு வங்கி சுயலாபத்துக்காகவே வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு: இசை வேளாளர் இளைஞர் பேரவை குற்றச்சாட்டு

திருச்சி

வாக்கு வங்கி லாபத்துக்காகவே வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அமைப்பின் நிறுவனர்- தலைவர் கே.ஆர்.குகேஷ் தலைமை வகித்தார். வள்ளலார் தமிழ் மன்றத் தலைவர் ஜெய.ராஜமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேஷ்வரன் ஆர்.அதிபன், கருணாநிதியின் உதவியாளராக இருந்த கே.நித்தியானந்தம், திமுக திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பேசினர்.

தொடர்ந்து, அமைப்பின் நிறுவனர் தலைவர் கே.ஆர்.குகேஷ், செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாட்டில் இசை வேளாளர்கள் 1989-ல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்பட்டனர். இந்தநிலையில், இசை வேளாளர்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி மிகப் பெரிய அநீதியை இழைத்துள்ளார்.

அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டுத் தொகுப்பில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 41 சாதிகளும், சீர்மரபினர் பட்டியலில் 109 சாதிகளும் உள்ள நிலையில், யாரையும் கலந்து ஆலோசிக்காமல் வாக்கு வங்கிக்காக தன்னிச்சையாக சுய லாபத்துக்காக அதிமுக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுக அரசின் இந்த நடவடிக்கையை சட்டரீதியாக சந்திப்போம். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x