Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

திமுக ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய அறிக்கையின்படி நடவடிக்கை: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

திமுக ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி உரியவர்களுக்கு, உரியவை வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் வடபெரும்பாக்கம் சாலையில் உள்ள வி.எஸ்.மணி நகரில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் அதிமுக ஆட்சிமுடியப் போகிறது. இதுவரைஅவர்கள் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் திமுக நடத்தும் நிகழ்ச்சிகளில் மக்களின் எழுச்சியைப் பார்க்க முடிகிறது. எனவே, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

இந்த ஆட்சி முடியும் நேரத்தில் முதல்வர் பழனிசாமி கபட நாடகம் நடத்தி வருகிறார். மிகவும்பிற்படுத்தப்பட்டோர் உள்ஒதுக்கீட்டை அவசர, அவசரமாக அவர் அறிவித்துள்ளார். 4 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்போது ஏன் அறிவிக்கவில்லை. இதுவும் தற்காலிகமானது என கூறுவது எப்படிப்பட்ட மோசடி. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த டிச.21-ம்தேதி தமிழக அரசு ஆணையம் அமைத்தது. இந்த ஆணையத்தின் அறிக்கை வருவதற்கு முன்பே ஏன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறார்?

திமுக ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று உரியவர்களுக்கு உரியவை வழங்கப்படும். திமுக ஆட்சி அமைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்படும். 2015-ல் வெள்ளப்பெருக்கின்போது ஏற்பட்ட பாதிப்புக்கு இந்த அரசின் அலட்சியம்தான் காரணம். இதை மக்கள்உணர வேண்டும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை வடகிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், மாவட்ட பொறுப்பாளர் சேகர்பாபு உள்ளிட்டஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதற்கு முன்னதாக தாம்பரம் படப்பை அருகே உள்ள கரசங்காலில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக அரசு கடன் வாங்குவதில் சாதனை செய்துள்ளது. தமிழகத்தின் கடன் தொகை ரூ.5 லட்சம் கோடியாகி விட்டது. 2001-06 அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழகத்தின் கடன் தொகை ரூ.57 ஆயிரம் கோடி. திமுக ஆட்சியில் 2006-11 ஆண்டுகளில்ரூ.44 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டது. திமுக ஆட்சி முடியும்போது இருந்த கடன் தொகை ரூ.1 லட்சம் கோடி.

இந்த பத்தாண்டு காலத்தில் மொத்தம் ரூ.5 லட்சம் கோடியாக ஆக்கிவிட்டார்கள். நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான திட்டமிடுதல் எதுவும் செய்யவில்லை. சமீபத்தில் கோவையில் பேசிய பிரதமர் மோடி, தான் ஒரு பிரதமர்என்பதை மறந்து திமுக மீது தரம் தாழ்ந்த அரசியல் விமர்சனம் செய்|துள்ளார். இந்தியாவின் ஒவ்வொருமாநிலத்திலும் பாஜகவினர் நடத்திய வன்முறைகளை என்னால்பட்டியலிட முடியும். அரசியல்ரீதியாக திமுகவை மோடி விமர்சனம் செய்யட்டும். அதற்கு பதில் தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். திமுகவை கொச்சைப்படுத்தும் வகையில் மோடி பேசுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x