Last Updated : 28 Feb, 2021 03:19 AM

 

Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

ஸ்ரீமுஷ்ணம் மாசி மகத்தில் மத நல்லிணக்கம் பூவராகவ சுவாமியை வரவேற்ற இஸ்லாமியர்கள்: வைணவ திருத்தலத்துக்காக தர்ஹாவில் சிறப்பு வழிபாடு

சிதம்பரம் அருகே மாசி மக தீர்த்தவாரிக்கு வருகை தந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகவ சுவாமிக்கு இஸ்லாமியர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின், உலக அமைதி வேண்டியும் சமூக நல்லிணத்துக்காகவும் அங்குள்ள தர்ஹாவில் பாத்தியா ஓதப்பட்டது.

இந்து - இஸ்லாமியர்கள் இடையே நல்லிணக்கத்தை பேணும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நற்செயல்பாடுகள் தொன்று தொட்டு நடந்து வருகின்றன. அதில் ஒன்று, சிதம்பரம் அருகே கிள்ளையில் ஆண்டுதோறும் மாசிமக தீர்த்த வாரி நாளில் பூவராகவ சுவாமிக்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு அளிப்பது. நடப்பாண்டில் இந்நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கிள்ளைக்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகவசுவாமிக்கு கிள்ளை தர்ஹா டிரஸ்டி சையத் சகாப் தலைமையில் வரவேற்று அளிக்கப்பட்டு, படையல் செய்யப்பட்டது. பின்னர் அங்குள்ள தர்ஹாவில் உலக அமைதி வேண்டியும் மத நல்லிணக்கத்துக்காகவும் பாத்தியா ஓதப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகவசுவாமி கோயில் செயல் அலுவலர் நரசிங்கபெருமாள், சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் செயல் அலுவலர் மஞ்சு, பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கிள்ளை தர்ஹா டிரஸ்டி சையத் சகாப் கூறும்போது “கிள்ளை பகுதியில் நவாப்பால் மானியமாக வழங்கப்பட்ட 365 காணி நிலம் உள்ளது. இதை எங்கள் பரம்பரையினர் நிர்வகித்து வருகின்றனர். வைணவ தலமான முஷ்ணத்தில் இருந்து பூவராகவ சுவாமி கிள்ளைக்கு செல்ல வழி கேட்ட போது எங்கள் முன்னோர் வழி அமைத்து கொடுத்துள்ளனர். மேலும் எங்களது மானிய நிலத்தை அரசு அதிகாரியாக இருந்த உப்பு வெங்கட்ராயர் என்பவர் அளவீடு செய்து கொடுத்தார். அவர் கேட்டுக் கொண்டதால் மானிய நிலத்தில் 25 காணியை எங்கள் முன்னோர் பூவராகவ சுவாமி மாசி மகத்தன்று தீர்த்தவாரிக்கு வரும்போது, மண்டகபடி செலவுக்காக ஒதுக்கி வைத்து தனியாக பராமரித்து வருகிறோம். மேலும், மண்டகபடியின் போது எங்கள் சொந்த பணத்தில் இருந்து 5 படி அரிசி, காணிக்கையாக 501 ரூபாய் மற்றும் பட்டு , பூ, பழம் கொடுத்து படையல் செய்வோம்.

பதிலுக்கு கோயிலில் இருந்து எங்க ளிடம் நாட்டுச் சர்க்கரை, பூ மாலை அளிப்பார்கள். இதை தர்ஹாவில் வைத்து உலக நண்மைக்காக பாத்தியா ஓதப்படும். இதில் பட்டாச்சாரியார்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்பார்கள். காலம் காலமாக இது நடந்து வருகிறத. இந்த மத நல்லிணக்க நிகழ்வு எங்கள் குடும்பத்தில் 10 தலைமுறையாக நடந்து வருகிறது” என்றார். தர்கா டிரஸ்ட் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x