Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

அதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி- கள்ளக்குறிச்சியில் ‘கெத்து’காட்டிய பிரேமலதா

தேர்தல் அறிவிப்பு வெளியாகிய நிலையில் தொகுதிப் பங்கீட்டில் முக்கிய இரு கட்சிகளும் கூட் டணிக் கட்சிகளுடன் தீவிரமாக பேசி வருகின்றன.

அதிமுக தரப்பில், பாமகவுடன் சுமூகமாக பங்கீடு முடிந்திருக்கிறது. தொடர்ந்துபாஜகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, இதுவரை அக்கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவில்லை. அதிமுக தலைவர்களும் தேமுதிக சார்பில் யாரும் சந்திக்காமல் இருந்து வந்தனர். பாமகவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தேமுதிகவிற்கு வழங்கப்படவில்லை என்ற ஆதங்கத்தை கட்சியின் பொருளாளர் பிரேமலதா சூசகமாக தெரிவித்து வந்தார்.

இதனிடையே பாமக வலுவாக உள்ளவட மாவட்டங்களில் தேமுதிகவிற்கு இருக்கும் பலத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக கள்ளக்குறிச்சியில் நேற்று தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டினார் பிரேமலதா.

இக்கூட்டத்திற்கு வருகை தந்த பிரேமலதாவிற்கு விழுப்புரம் மாவட்டம் தொடங்கி கள்ளக்குறிச்சி மாவட்டம் வரை தொண்டர்கள் புடைசூழ சுமார் 4 மணி நேரம் பயணித்து கூட்ட அரங்கிற்குச் சென்றார் பிரேமலதா. வழிநெடுகிலும் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தவாறு சென்ற பிரேமலதாவிற்கு தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்து, வரவேற்பு அளித்தனர்.

கடந்த மக்களவைத் தேர்தல் முதல் அதிமுக தலைமை, தேமுதிகவிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைந்து வருவதாலும், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிக தொகுதிகள் பெறும் வகையிலும், வட மாவட்டங்களில் தேமுதிகவின் பலத்தை நிரூபிக்கும் வகையிலும் இந்தக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாம்.

அதனால் தான் விஜயகாந்த் வந்தால் எந்த அளவுக்கு வரவேற்பு அளிக்கப்படுமோ அந்த அளவுக்கு பிரேமலதாவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x