Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் வேண்டாம்; வாக்கு சேகரிக்க சாதியை ஒரு கருவியாக பயன்படுத்தாதீர்கள்: அரசியல் கட்சியினருக்கு தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், வழிபாட்டுத் தலங்களில் வாக்கு சேகரிக்க வேண்டாம். வாக்கு சேகரிக்க சமூகம், சாதியை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது என்று கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி அனைத்துக் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத் தேர்தல்நடத்தை விதிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்டஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தது:

எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ தனி நபர்களுக்கு சொந்தமான கட்டிடங்கள்(வீடு) சுற்று சுவர்களில் அவர்கள் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுதல், பதாகைகள் வைத்தல்,சுவரொட்டிகள் ஒட்டுதல், பரப்புரை வாசகங்கள் எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. இது போன்றவைகளுக்கு செலவிடப்படும் தொகை வேட்பாளரின் செலவுத் தொகை யில் சேர்த்து கணக்கில் காண்பிக்கப்பட வேண்டும்.

தேர்தல் பிரச்சார களமாக மசூதி, சர்ச் மற்றும் கோயில் போன்ற வழிப்பாட்டுத் தலங்கள் பயன்படுத்தப்படக் கூடாது. வாக்கு சேகரிக்க சமுதாயம் மற்றும்சாதியினை ஒரு கருவியாக பயன்படுத் துதல் கூடாது.

பிரசாரத்திற்கு ஒலிப்பெருக்கி பயன் படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியும், வேட்பாளரும் முன் அனுமதி பெற வேண்டும்.

தேர்தலுக்காக நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள் இரவு 10 மணிக்குமேல் நடத்தப்படக் கூடாது. மேலும் போக்குவரத்தை தடை செய்யும் வண்ணம் நடத்தக் கூடாது. தேர்தல் சமயத்தில் கட்சிகள் தற்காலிக அலுவலகங்களை அமைக்கலாம்.

கல்யாண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் போன்றவற்றில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான பட்டியலை தேர்தல் அலுவலரிடம் முன்கூட்டியே சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டும்.

பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்களை சிவிஜில் (c VIGIL) தொலைபேசி செயலி மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம். மேலும்பொதுமக்கள் தங்கள் புகார்களை தொலைபேசி வாயிலாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800- 425-8530 என்ற எண்ணிற்கும் 04142-220277,220288 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தேர்தல் விளம்பர அனுமதி, அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்தல்தொடர்பான கூட்டம், பிரச்சாரம், ஊர்வலம், வாகன அனுமதி போன்வற்றிற்கு அதற்கான நாள், செல்லும் பாதை, நடைபெறும் இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களின் வரிசையின் பேரில்அரசியல் கட்சிகள் வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x