Last Updated : 27 Feb, 2021 06:55 PM

 

Published : 27 Feb 2021 06:55 PM
Last Updated : 27 Feb 2021 06:55 PM

தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம்: திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானது, கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்று திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது திருவெறும்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். வரக்கூடிய தேர்தலில் அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த சூழலில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் உள்ளிட்டவை திமுக கூட்டணியில் திருச்சி கிழக்கு தொகுதியைக் கேட்டு வலியுறுத்தி வருகின்றன.

இதனால் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடும் தொகுதி குறித்து அக்கட்சியினரிடத்தில் குழப்பம் நிலவி வந்தது. அதற்கேற்ப தெற்கு மாவட்ட திமுகவுக்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 3 தொகுதிகளுக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருப்பமனு அளித்திருந்தார்.

இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வி.என்.நகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் பேசிய திருச்சி மாநகர பகுதி செயலாளர்களான மதிவாணன் (மலைக்கோட்டை), மண்டிசேகர் (பாலக்கரை), பாலமுருகன் (கே.கே.நகர்), வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தினகரன், மகளிரணி அமைப்பாளர் லீலா வேலு உள்ளிட்டோர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இம்முறை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்திப் பேசினர்.

அவர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானது. கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். எனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்தத் தொகுதியில், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் மு.க.ஸ்டாலினே போட்டியிடுவதாகக் கருதி கடுமையாகப் பணியாற்ற வேண்டும். தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளன.

எனவே இப்போதிலிருந்தே அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட வேண்டும். தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதனை திமுக தலைவர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் வெற்றி பெறப் போவதும், மு.க.ஸ்டாலின் முதல்வராகப் போவதும் உறுதி'' என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா, கோவிந்தராஜ், செந்தில், ராக்போர்ட் இன்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x