Published : 27 Feb 2021 05:59 PM
Last Updated : 27 Feb 2021 05:59 PM

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி, பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உட்பட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதனால், குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதற்கிடையே போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1000 இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு மற்றும் தொழிலாளர் நலன் ஆணையம் இன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில், தொழிலாளர் நல ஆணையர் லக்‌ஷ்மிகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. இடைக்கால நிவாரணத்தை ஏற்றுக் கொள்வதாகப் போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்று போக்குவரத்துத் துறை உறுதியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் போராட்டம் நடைபெற்ற 3 நாட்களுக்கும் சம்பளப் பிடித்தம் செய்யப்படாது என்றும் அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x