வழக்கில் விடுதலைச் செய்யப்படுபவர்கள் விசாரணை அதிகாரி மீது வழக்கு தொடரலாமா?- உயர் நீதிமன்றம் தீர்ப்பு

வழக்கில் விடுதலைச் செய்யப்படுபவர்கள் விசாரணை அதிகாரி மீது வழக்கு தொடரலாமா?- உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டால், விசாரணை அதிகாரி தனக்கு எதிராக பொய் வழக்கு தொடர்ந்ததாக கூற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வில்சன் சுந்தர்ராஜ் என்பவருக்கு எதிராக எழும்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு, பின் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. அந்தஸ்தில் இருந்த ராதிகா, வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், வில்சன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில் புகார்தாரர் ராஜாமணியுடன் சேர்ந்து விசாரணை அதிகாரியான டிஎஸ்பி ராதிகா தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி சென்னையிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் வில்சன் சுந்தர்ராஜ் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சிபிசிஐடி அதிகாரியான ராதிகாவை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ராதிகா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் விடுதலை ஆகும் பொழுது, தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாக குற்றம் சாட்ட முடியாது எனக் கூறி, ராதிகாவுக்கு எதிரான சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதேபோல, வழக்குகளில் விடுதலை செய்யப்படுபவர்கள், விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதிப்பது என்பது விசாரணை அமைப்பின் சுதந்திரத்தில் தலையிடுவது போல் ஆவிடும் எனவும் நீதிபதி, தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in