Published : 27 Feb 2021 12:41 PM
Last Updated : 27 Feb 2021 12:41 PM

மார்ச் 2 முதல் திமுக வேட்பாளர்களுடன் ஸ்டாலின் நேர்காணல்: மாவட்ட வாரியாக விவரம்

சென்னை

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வரும் மார்ச் 2 முதல் 6 வரை விருப்பமனு அளித்த வேட்பாளர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று வெளியிட்டார். தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்.6 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 12 முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகின்றது.

தேர்தல் அறிவிப்பை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை வேகம் பெற்றுள்ளன. இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் கட்சியினர் வெற்றி வாய்ப்பு, தொகுதிகள் மாவட்ட வாரியாக கள நிலவரம் குறித்து அறிய திமுக தலைமை விருப்ப மனு அளித்தவர்களை அழைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்த உள்ளது. மாவட்ட வாரியாக கட்சியின் வெற்றி வாய்ப்பு, கூட்டணிக் கட்சிகள் நிலவரம் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து இதில் அலசப்படும்.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் செலுத்தியவர்களை திமுக தலைவர் மார்ச் 2 முதல் மார்ச் 6-ம் தேதி வரை, பின்வரும் மாவட்ட வாரியாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் - வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.

குறிப்பிட்டுள்ள தேதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்/ பொறுப்பாளர்கள் மட்டும் வரவேண்டும். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதிச் செயலாளர்கள் வரவேண்டிய அவசியமில்லை.

வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ - பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் - 2021

மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெறும் நாள் விவரம்

மார்ச் 2 செவ்வாய் காலை 8 மணி- கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, மத்திய, தென்காசி வடக்கு, தெற்கு ராமநாதபுரம்

மார்ச் 2 மாலை 4 மணி- விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு திண்டுக்கல் கிழக்கு, மேற்கு.

மார்ச் 3 புதன் காலை 9 மணி- மதுரை வடக்கு, தெற்கு, மதுரை மாநகர் வடக்கு, தெற்கு நீலகிரி, ஈரோடு வடக்கு, தெற்கு.

மார்ச் 3 மாலை 4 மணி- திருப்பூர் மத்திய, வடக்கு, திருப்பூர் கிழக்கு, தெற்கு கோவை கிழக்கு, வடக்கு, தெற்கு கோவை மாநகர் கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு.

மார்ச் 4 வியாழன் காலை 9 மணி - தருமபுரி கிழக்கு, மேற்கு நாமக்கல் கிழக்கு, மேற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய புதுக்கோட்டை வடக்கு, தெற்கு

மார்ச்-4 மாலை 4 மணி - கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு, திருவாரூர், நாகை வடக்கு, தெற்கு.

மார்ச் 5 வெள்ளி காலை 9 மணி - தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய, கடலூர் கிழக்கு, மேற்கு கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு விழுப்புரம் வடக்கு, மத்தியம்.

மார்ச் 5 மாலை 4 மணி - திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, மத்திய காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு.

மார்ச் 6 சனி காலை 9 மணி - திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு, சென்னை வடக்கு, வடகிழக்கு, சென்னை கிழக்கு, தெற்கு சென்னை மேற்கு, தென்மேற்கு.

மார்ச் 6 சனி மாலை 4 மணி - புதுச்சேரி, காரைக்கால்”.

இவ்வாறு துரைமுருகன் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x