Published : 16 Jun 2014 09:47 AM
Last Updated : 16 Jun 2014 09:47 AM

கூடங்குளம் அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி

கூடங்குளம் முதலாவது அணுஉலையில், மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. இங்குள்ள முதலாவது அணுஉலை மின் உற்பத்தி கடந்த 7-ம் தேதி சனிக்கிழமை பகல் 1.20 மணிக்கு முழு உற்பத்தியான 1,000 மெகாவாட்டை எட்டியது. தொடர்ந்து, 4 நாட்களாக இந்த அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டு, அபிஷேகப்பட்டி மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டிருந்தது.

‘ஆய்வுக்காக 4 நாளில் அணுஉலை மற்றும் டர்பைன் செயல்பாடுகள் படிப்படியாக நிறுத்தப்படும்’ என்று நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் கடந்த 7-ம் தேதி தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 10-ம் தேதி மாலை 6.30 மணியளவில் அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கடந்த 4 நாள்களாக இறுதிகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பான அறிக்கைகள் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்துக்கு அளிக்கப்பட்டது. வாரிய ஒப்புதலுடன் மீண்டும் முதலாவது அணுஉலையில், சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் மின் உற்பத்தி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை பகலில் மின்உற்பத்தி, 360 மெகாவாட்டை எட்டியிருந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் உற்பத்தி அளவு, 1,000 மெகாவாட்டை எட்டும் என்று அணுமின் நிலைய வட்டாரங்களில் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x