Published : 27 Feb 2021 10:15 AM
Last Updated : 27 Feb 2021 10:15 AM

9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அரசாணை வெளியீடு

9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் அதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி ஊரடங்கு அமலானது. பின்னர் அது படிப்படியாக நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு படிப்படியாகத் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 9,10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றித் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சில பாடங்களுக்கான தேர்வுகள் மட்டும் நடத்தப்பட்டன. விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில் மாணவர்கள் சரியாக கவனம் செலுத்த முடியாத நிலை இருந்து வந்தது. பாடத்திட்டங்களையும் சரிவரக் கற்பிக்க முடியாத நிலையில் பாடத்திட்டங்களை அரசு குறைத்தது. இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதுவது, தேர்தல் பிரச்சாரம், கரோனா தொற்று குறையாத நிலையில் இந்த ஆண்டு 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று அதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையில் கூறியிருப்பதாவது:

''கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

2020-21ஆம் கல்வியாண்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தக் கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9,10,11-ம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது”.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x