எங்கள் பத்திரிகையின் விற்பனையாளர்களுக்கு நெருக்குதல்: காவல் துறை மீது ஆனந்த விகடன் குற்றச்சாட்டு

எங்கள் பத்திரிகையின் விற்பனையாளர்களுக்கு நெருக்குதல்: காவல் துறை மீது ஆனந்த விகடன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்த கட்டுரை வெளியாகியுள்ள ஆனந்த விகடன் வார இதழை கடைகளில் விற்பனை செய்யவிடாமல் போலீஸார் கெடுபிடி செய்வதாக அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ரா.கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் அதிமுக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆனந்த விகடன் இதழில் கடந்த 30 வாரங்களாக 'மந்திரி தந்திரி' என்ற கட்டுரைத் தொடர் வெளியானது.

அந்த வரிசையில் கடந்த 25-ம் தேதியிட்ட இதழில் முதல்வர் ஜெயலலிதா தொடர்பான கட்டுரை வெளியானது.

முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு

அன்றைய தினம் முதல், ஆனந்த விகடன் பத்திரிகையை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, ஆனந்த விகடன் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆனந்த விகடன் ஆசிரியர் - பதிப்பாளர் மற்றும் அச்சிடுபவர் மீது அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, ஆனந்த விகடனின் முகவர்கள், விற்பனையாளர்கள், கடைக்காரர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் ஆகியோரைத் தொடர்பு கொள்ளும் காவல் துறையைச் சேர்ந்த சிலர், ஆனந்த விகடனை விற்கக் கூடாது என்று அச்சுறுத்துகின்றனர். மீறி விற்பனை செய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்றும் மிரட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவிர, விகடனின் ஃபேஸ்புக் பக்கம் கடந்த 23-ம் தேதி மாலை முதல் திடீரென முடக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப்களில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் விகடனைத் தொடர்ந்து வருகிறார்கள். இதில் ஆனந்த விகடன் ஃபேஸ்புக் பக்கம் மட்டும் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த ஒரு முறையான அறிவிப்பும் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் இருந்து விகடனுக்கு வரவில்லை. விகடன் தரப்பிலிருந்து மேற்கொண்ட விசாரணைக்கும், இதுவரை முறையான, முழுமையான பதில் இல்லை. ஃபேஸ்புக் பக்கத்தை மீட்கும் முயற்சியைத் தொடர்கிறோம்.

எனினும், ஃபேஸ்புக் பக்கம் முடக்கத்துக்கும், இந்த அரசியல் நிகழ்வுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை" என்று கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கு மறுப்பு

இந்நிலையில், விகடன் ஆசிரியர் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், "ஆனந்த விகடன் பிரதி விற்பனைக்கு யாரும் தடை விதிக்கவில்லை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in