Last Updated : 27 Feb, 2021 03:16 AM

 

Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

சமூக வலைதளங்களில் பரவிவரும் அதிமுக செய்தித் தொடர்பாளரின் விமர்சனம்: திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் கண்டனம்

கோவை

சமூக வலைதளங்களில் பரவிவரும்அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரத்தின் விமர்சனத் துக்கு நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக கோவை மாநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் சார்பில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி, கோவை கொடிசியா மைதானத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். “அடுத்து திமுக ஆட்சி அமைந்ததும், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்நிலையில், கோவை காரமடையில் அதிமுக சார்பில் கடந்தவாரம் நடைபெற்ற கூட்டத்தில், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் திமுகவை விமர்சனம் செய்து பேசினார். அது தொடர்பான வீடியோ முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வலம்வருகிறது. ஒரு நிமிடம் 9 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், ‘‘சிங்காநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த கார்த்திக் உள்ளார். கோவை மக்களவை உறுப்பினராக திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன் உள்ளார். கார்த்திக் எம்எல்ஏவை அருகில்வைத்துக் கொண்டே, இத்தொகுதி யில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்களை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?, ஏதாவது வேலை செய்து இருக்கிறார்களா?, தெருவுக்கு வந்து இருக்கிறார்களா? என மு.க.ஸ்டாலின் கேட்டதற்கு, மக்கள் இல்லை என அவருக்கு பதில் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டதும் கார்த்திக் பதறிவிட்டார். விரக்தி மனநிலைக்கு சென்றுவிட்டார்’’ என அந்த வீடியோவில் கல்யாணசுந்தரம் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக நா.கார்த்திக் எம்எல்ஏ கூறும்போது, ‘‘கல்யாண சுந்தரம் கூறுவதில் உண்மை கிடையாது. தமிழக அளவில் சிறப்பாக செயல்படும் திமுக மாவட்டப் பொறுப்பாளர் நான்தான் என மு.க.ஸ்டாலின் கோவையில்நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார். தனது கொள்கை,லட்சியத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அதிமுகவில் இணைந்தவர் கல்யாணசுந்தரம். பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த இடத்தில் நடக்காததை நடந்ததுபோல இட்டுக்கட்டி கல்யாண சுந்தரம் பேசியுள்ளார். ஆக்கப்பூர் வமான விவாதங்கள் இருக்கலாம். அவர் சரியான வசன வியாபாரி என்பதை நிரூபித்துள்ளார். பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x