Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் எடுத்து வரப்பட்ட ரூ.20 லட்சம் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேர்தல் சிறப்பு குழுவுடன் இணைந்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த பினாகினி எக்ஸ்பிரஸ், நடைமேடை 4-ல் வந்து நின்றது. அதில் இருந்து சந்தேகத்துக்கிடமாக இறங்கிய 2 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்களது பைகளை சோதனை செய்தனர். 2 பேரின் பைகளிலும் கட்டுக்கட்டாக தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நடத்திய விசாரணையில், அவர்கள் 2 பேரும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஹைதர் (55) , யூசுப் அலி (40) என்பதும், நெல்லூரில் அவர்கள் வேலை செய்யும் கிளை நிறுவனத்தில் இருந்து, நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு பணத்தை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர்.

உரிய ஆவணம் இல்லாததால், ரூ.20 லட்சம் பணத்தையும், 2 செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த பணம் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x