

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை (பிப்.27) தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
காங்கிரஸ் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் ஏற்கெனவே அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தொடர்ந்து தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் நாளை (பிப்.27) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் நாளை காலை 11 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
தொடர்ந்து காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரமோகன், இணைத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். வழக்கறிஞர்கள் கறுப்பு கோர்ட் அணிந்து, பார் கவுன்சில் வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் காலை 10 மணிக்கு வஉசி கல்லூரி கூட்ட அரங்கத்துக்கு வருகை தரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே பொதுமக்களிடையே ராகுல் காந்தி பேசுகிறார். அதன்பிறகு கடற்கரை சாலை வழியாக முத்தையாபுரத்தை அடுத்த கோவங்காடு விலக்கு பகுதியில் உப்பள தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் அங்கிருந்து முக்கானி, ஆத்தூர், சாகுபுரம், குரும்பூர் வழியாக ஆழ்வார்திருநகரிக்கு வருகிறார். அங்கு காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார். பின்னர் நாசரேத் வழியாக சாத்தான்குளத்துக்குச் செல்கிறார். அங்கு காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்.
அதன்பிறகு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதுபோல பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.