Last Updated : 26 Feb, 2021 05:22 PM

 

Published : 26 Feb 2021 05:22 PM
Last Updated : 26 Feb 2021 05:22 PM

அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் ஆயிரம் மாடுகள் பங்கேற்பு: மாடு முட்டி 4 பேர் பலி; 94 பேர் காயம்

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. மாடு முட்டியதில் 4 பேர் இறந்தனர், 94 பேர் காயமடைந்தனர்.

சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் சிறிய குன்றின்மீது குன்றக்குடி ஆதீன மடத்துக்கு உட்பட்ட பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது.

ஐந்து நிலை நாட்டார்களுக்கு உட்பட்ட இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின் 10-ம் நாளில் மஞ்சுவிரட்டு நடக்கிறது. மஞ்சுவிரட்டை முல்லைமங்கலம், சதுர்வேதமங்கலம், கண்ண மங்கலம், சீர்சேர்ந்தமங்கலம், வேழமங்கலம் ஆகிய ஐந்துநிலை நாட்டார்கள் சேர்ந்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர்.

அதன்படி இன்று அரளிபாறையில் மஞ்சுவிரட்டு நடந்தது. இதையொட்டி மதியம் 1 மணிக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மற்ற காளைகளுக்கும் வேட்டி, துண்டு வழங்கப்பட்டன. பிறகு தொழுவிலிருந்து முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதும், மற்ற காளைகள் அவிழ்க்கப்பட்டன.

தொழுவில் இருந்து பதிவு செய்யப்பட்ட 111 மாடுகள் மட்டும் அவிழ்க்கப்பட்டன. காளைகளை அடக்க 66 மாடுபிடி வீரர்கள் களமிறங்கின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளில் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் ஆங்காங்கே வயல்வெளிகளிலும் ஆயித்திற்கும்க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாடு முட்டியதில் திருப்பத்தூர் புதூரைச் சேர்ந்த சேது (45), ஆத்தங்குடியைச் சேர்ந்த அஜித்குமார் (26), நாமனூரைச் சேர்ந்த மருது (40), மேலவண்ணாரிருப்பைச் சேர்ந்த மகேஷ் (23) ஆகிய 4 பேர் இறந்தனர். மேலும் 94 காயமடைந்தனர்.

பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேல்சிகிச்சைக்காக 6 பேர் சிவகங்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் சிகிச்சை அளிக்க தற்காலிக அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமிற்குள் 2 காளைகள் புகுந்ததால், மருத்துவர்கள் அலறியபடி ஓடினர். மலைக் குன்றின் மீது அமர்ந்து பல்லாயிரக்கணான பெண்கள், சிறுவர்கள் மஞ்சுவிரட்டை ரசித்தனர்.

இதில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன், வட்டாட்சியர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அரளிப்பாறை மஞ்சுவிரட்டை காண வந்த வெளியூர் நபர்களுக்கு கிராமமக்கள் பாரபட்சமின்றி அனைவருக்கும் தட புடலாக விருந்தளித்து உபசரித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x