

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 தென்மாவட்டங்களிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தயார் நிலையில் உள்ளன என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய்தத் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தென்மாவட்டங்களில் ராகுல்காந்தியின் சுற்றுப்பயணத்தின்போது தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள், உப்பள தொழிலாளர்களுடனும், திருநெல்வேலியில் கல்லூரி பேராசிரியர், கல்வியாளர்களுடனும், தென்காசி மாவட்டம் புளியங்குடியில் விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோர், நெசவாளர்களுடனும், கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டில் மாணவர்களுடனும் அவர் கலந்துரையாடுகிறார்.
தேர்தல் நேரம் என்பதால் தமிழகம், புதுச்சேரி குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்கறை வந்துள்ளது. புயல், மழையால் பாதிப்புகள் நேரிட்டபோது மக்களைப் பார்க்க அவர் வரவில்லை.
புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலையை பாஜக நிறைவேற்றியிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் முடக்கினர்.
இதை மக்கள் நன்கறிவர். தமிழகத்தில் முக்கிய அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை ஆளுநரிடம் திமுக அளித்திருக்கிறது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆட்சிபோகும் நிலையில் பல திட்டங்களை முதல்வர் அறிவித்து கொண்டிருக்கிறார்.
நாடு முழுவதும் எதிர்க் கட்சியினருக்கு அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் பாஜக நெருக்கடி கொடுக்கிறது. அதேநேரத்தில் மத்திய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படவில்லை. உள்நாட்டிலுள்ள மக்களுக்கு கரோனா தடுப்பூசியை போடாமல் மத்திய அரசு வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துவரும் நிலையில் இந்தியாவில் நாளுக்குநாள் விலை ஏற்றப்படுகிறது.
இதனால் அனைத்து பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டுவந்த பல்வேறு திட்டங்களுக்கான பெயர்களை மட்டுமே மாற்றி மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.