Published : 26 Feb 2021 01:12 PM
Last Updated : 26 Feb 2021 01:12 PM

மகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு 

சென்னை

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள 15 லட்சம் பெண்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற அனைத்துக் கடன்களும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் பேரவையில் அறிவித்தார்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு கடன் ரத்து குறித்து 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“கிராமப்புறங்களிலும், நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும் வறுமை ஒழிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. ஜெயலலிதா பெண்கள் சுய உதவிக்குழுக்களை அமைத்து, அவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு மகத்தான வழியை வகுத்துத் தந்தார். இன்றைய அளவில் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இக்குழுக்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுக்களில் உள்ள பெண்கள், பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சிறு தொழில் செய்யவும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று வருகின்றனர்.

கடந்த 2019 பிப்ரவரி முதல் கரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டது. தமிழ்நாடும் இதன் பாதிப்புக்கு உள்ளாகி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, தேவைப்படும் தளர்வுகளுடன் அது தொடர்ந்து அமலில் உள்ளது.

நோய்த் தொற்றாலும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமங்களைக் குறைக்க, நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி, பருப்பு போன்றவை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் வழங்கியதுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரொக்க உதவியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ உதவிகளையும் தமிழக அரசு வழங்கியது.

இந்நிலையில், கரோனா தொற்றுக் காலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், சுய உதவிக்குழுக்கள் தாங்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த இயலாத நிலை உள்ளதாகவும், அவர்களின் துயரைத் துடைக்க தமிழ்நாடு அரசு தங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் துயர் துடைக்க, அவர்கள் கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் பெற்று நிலுவையில் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதற்கான அரசாணை பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x