Published : 26 Feb 2021 12:13 PM
Last Updated : 26 Feb 2021 12:13 PM

தா.பா. மறைவு: 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் திமுகவினர் அஞ்சலி

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் மறைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

நுரையீரல் தொற்று மற்றும் வயோதிகம் காரணமாக தா.பாண்டியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. வென்டிலேட்டர் மூலம் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று (பிப். 26) காலை காலமானார்.

அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தில் இன்று காலை 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களைப் பெற்றார். பின்னர், சமூக சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, மறைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா.பாண்டியனுக்கு மேடையில் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், நிகழ்ச்சி முடிந்தபின் மாலை சென்னையில் உள்ள தா.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x