Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM

இந்த மாதத்தில் மட்டும் ரூ.100 உயர்வு: சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.810 ஆக அதிகரிப்பு

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர் விலைபிப்ரவரி மாதத்தில் மட்டும் 3-வதுமுறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரித்ததால், சிலிண்டர் விலை ரூ.810 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயிக்கின்றன. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ஓராண்டுக்கு பிறகு முதல்முறையாக 61 டாலரை எட்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 12 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால், மத்தியப் பிரேதசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேல் அதிகரித்தது. டீசல் விலை ரூ.88-ஐ கடந்தது. தமிழகத்தில் பெட்ரோல் ரூ.92.90, டீசல் ரூ.86.31-க்கு விற்கப்படுகிறது.

இதற்கிடையில், சமையல் காஸ்சிலிண்டர் விலையும் தற்போது அதிகரித்து வருகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் காஸ்விலை இந்த மாதத்தில் மட்டும் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை அதிகரிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த பிப்ரவரியில் மட்டும்3 முறை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4-ம் தேதி ரூ.25-ம்,15-ம் தேதி ரூ.50-ம் அதிகரிக்கப்பட்ட நிலையில், 3-வது முறையாகநேற்று மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பிப்ரவரியில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடையுள்ள மானிய சிலிண்டர் ரூ.810-க்குவிற்கப்படுகிறது.

ஒரே மாதத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலை 3 முறைஉயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x