Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM

அதிமுக நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மதுசூதனன், ஓபிஎஸ், இபிஎஸ் மனு

சென்னை

அதிமுக நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யக்கோரி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அதிமுக விதிகளுக்கு புறம்பாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, அந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் உள்கட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேணடும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதிமுக நிர்வாகிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யக் கோரி அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

உண்மையான அதிமுக

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான அணியே உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையம் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

அரசியல் உள்நோக்கம்

இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகளுக்கு எதிரான இந்த வழக்கு விசார ணைக்கு உகந்தது அல்ல.

உள்கட்சி தேர்தலை நடத்து வதற்கு தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே அவகாசம் பெறப் பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத மனுதாரர், இந்த வழக்கை தொடர எந்த உரிமையும் இல்லை. எனவே, கட்சிக்கு அவப்பெயர் மற்றும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள் ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.பொங்கியப்பன், இதுதொடர்பாக மனுதாரர் 8 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

உள்கட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே அவகாசம் பெறப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத மனுதாரர், இந்த வழக்கை தொடர எந்த உரிமையும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x