Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள குவாரி டெண்டருக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை

சென்னை

கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள குவாரி டெண்டருக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் எம்பி தாமரைச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தொடர்ந்திருந்த 2 வழக்குகளில், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 18 இடங்களில்கருப்பு, சிவப்பு,சாம்பல் நிற கிரானைட் குவாரிகள் அமைக்க கடந்தாண்டு அக்டோபரில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,டெண்டர் நடவடிக்கைகளைத் தொடரலாம்.

ஆனால், ஒப்பந்ததாரர்களிடம் கனிமவள குவாரிகளை ஒப்படைக்கக் கூடாது என இடைக்காலத் தடைவிதித்து இருந்தது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் 17 குவாரிகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 குவாரிகளும் அமைக்க தற்போது மீண்டும் புதிதாகடெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் குவாரிகளை ஒப்படைக்க தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் சுரங்க மற்றும் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாமல் தமிழக அரசு மீண்டும் புதிதாக டெண்டர் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது சட்டவிரோதமானது.எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும், என கோரியிருந்தார்.

இதில் கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நேற்று நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சத்திகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கான புதிய குவாரி டெண்டருக்கு இடைக்காலத்தடை விதித்தனர். மேலும் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 3-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x