Published : 26 Feb 2021 03:16 AM
Last Updated : 26 Feb 2021 03:16 AM

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.14 கோடியில் பாளை. வஉசி மைதானம் புனரமைப்பு பணிகள் தொடங்கியதால் நடைபயிற்சி, விளையாடுவதற்கு தடை

பாளையங்கோட்டை வஉசி மைதானம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகிறது. கட்டுமானப் பணி நேற்று தொடங்கியதால், இங்கு நடை பயிற்சி மற்றும் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி உதயமாகும் முன், பாளையங்கோட்டை நகராட்சியில் இருந்த இந்த மைதானம் கடந்த 12.1.1965-ல் சென்னை மாநில ஸ்தலஸ்தாபன அமைச்சராக இருந்த எஸ்.எம்.ஏ.மஜீத் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது, பாளையங்கோட்டை நகராட்சி தலைவராக எம்.எஸ்.மகராஜபிள்ளை இருந்தார். இம்மைதானத்தில் கிழக்கு பகுதியில் காலரிகள் அமைக்க, கடந்த 15.8.1965-ல் இந்தியா பிரான்ஸ் இன்டர்நேஷனல் ஹாக்கி விளையாட்டு கமிட்டி நன்கொடை அளித்திருந்தது. இவை தொடர்பான கல்வெட்டு இங்குள்ளன.

கபடி, வாலிபால், கால்பந்து என்று பல்வேறு விளையாட்டுகளில் தலைசிறந்த வீரர்களை உருவாக்கிய பெருமைபெற்றது வஉசி மைதானம். சமீபகாலமாக போட்டிகள் நடத்தப்படாமல் பொட்டல் வெளியாக காட்சியளித்தது. சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழாக்கள் மட்டும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இங்கு நடத்தப்படுகிறது. நகர மக்கள் தங்கள் குழந்தைகளுடன் மாலை வேளையில் இங்கு வந்து பொழுதுபோக்கினர்.

பழமைவாய்ந்த இந்த மைதானத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புனரமைப்பு செய்ய, திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புனரமைப்பு பணி நேற்று தொடங்கியது. இங்குள்ள பழைய காலரிகள் மற்றும் மைதானத்தின் தென்புறத்தில் இருந்த மேடை அமைப்புகளை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. காலரிகள் புதிதாக அமைக்கப்படும். அதேநேரத்தில், வெளிப்புறத்தில் வணிக வளாகமாக கடைகளைக் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணி நேற்று தொடங்கியதை அடுத்து மைதானத்தின் உட்புறத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளவும், மைதானத்தினுள் விளையாடுவதற்கும் தடைவிதித்து தடுப்புகள் அமைக்கப் பட்டன. மைதானத்தின் வடபுறமுள்ள சிறுவர் பூங்கா, தென்புறமுள்ள உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை வழக்கம்போல் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

மைதானத்தை புனரமைக்கும் வேளையில், அதன் பழமையை வரும் தலைமுறைக்கு தெரிவிக்கும் வகையில், அதிலுள்ள பழமையான கல்வெட்டுகளை சேதப்படுத்தாமல் புதிய கட்டிடத்திலும் பதிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

மைதானத்தை புனரமைக்கும் வேளையில், அதன் பழமையை வரும் தலைமுறைக்கு தெரிவிக் கும் வகையில், அதிலுள்ள பழமையான கல்வெட்டுகளை சேதப்படுத்தாமல் புதிய கட்டிடத் திலும் பதிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x