Published : 25 Feb 2021 06:51 PM
Last Updated : 25 Feb 2021 06:51 PM

அதிமுக-பாஜக கூட்டணியை திமுக கூட்டணி வீழ்த்தும்: சென்னையில் பிரகாஷ் காரத் பேட்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்க உள்ளது என, அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் இன்று (பிப். 25) மாலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கஇருக்கிறோம். திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்தும்.

தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் சந்திக்கும், சந்தித்த பிரச்சினைகள் குறித்து பேசுவோம். இந்தியா முழுவதும் மக்கள் சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்க உள்ளது. ஒரு சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தொட்டு உள்ளது. மத்திய அரசின் கொள்கையால் தான் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோலிய விலையில் 63 சதவீதம் கலால் வரி மற்றும் இதர வரிகள் தான். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளது.

ஆனால், பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. கலால் வரி மற்றும் இதர வரிகளை மத்திய அரசு குறைக்க வேண்டும். வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை உடனடியாக குறைந்துவிடும். இது போன்ற பிரச்சினைகளை தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் கொண்டு செல்வோம்".

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x