Last Updated : 25 Feb, 2021 06:02 PM

 

Published : 25 Feb 2021 06:02 PM
Last Updated : 25 Feb 2021 06:02 PM

ராமர் ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: மதுரை காவல் ஆணையர் மார்ச் 1-ல் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

மதுரையில் ராமர் ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாநகர் காவல் ஆணையர் மார்ச் 1ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்வகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ராமர் கோவில் கட்டும் பணிக்காக உலகம் முழுவதும் வாழும் இந்துக்களிடம் எங்கள் அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் நூறு வார்டுகளிலும் ராமர் கோவிலுக்கு நிதி வசூலிக்க ரத யாத்திரை நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

போலீஸார் அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தோம். தனி நீதிபதி விசாரித்து நிபந்தனைகளுடன் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார்.

அதன் பிறகும் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசராகவன் வாதிடுகையில், நீதிமன்றம் உடனடியாக நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டுந்த நிலையில், தற்போது வரை அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. ரத யாத்திரை வாகனத்தையும் காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்றார்.

இதையடுத்து, ரதயாத்திரை வாகனத்தை உடனடியாக விடுவிக்கவும், மதுரை மாநகர காவல் ஆணையர் மார்ச் 1-ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x