Published : 25 Feb 2021 06:15 PM
Last Updated : 25 Feb 2021 06:15 PM

மாநகராட்சி சார்பில் இலவச நீட் பயிற்சி: சென்னை பள்ளி மாணவர்களுக்கு இன்று தொடக்கம்

சென்னை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னை பள்ளிகளில் 2020-21ஆம் கல்வியாண்டில் பயிலும் 101 மாணவ, மாணவியர்களுக்கு ‘நீட் (NEET) என்னால் முடியும்’ சிறப்புப் பயிற்சி திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் இன்று வெளியான செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை பள்ளிகளில் 2020-21ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவ, மாணவியர்கள் நீட் (NEET) தேர்வில் வெற்றி பெற்று எம்பிபிஎஸ் மருத்துவப் பட்டப்படிப்பு பயிலும் வாய்ப்பைப் பெறுவதற்காக 'நீட் (NEET) என்னால் முடியும்' திட்ட தொடக்க நிகழ்ச்சியை ஆணையர் பிரகாஷ் இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் எம்பிபிஎஸ் மருத்துவப் பட்டப் படிப்பிற்கான சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்ததன் அடிப்படையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற நீட் தேர்வு எழுதிய 60 மாணவர்களில் 11 மாணவ, மாணவியர்கள் எம்பிபிஎஸ் பயிலும் அரிய வாய்ப்பை 2019-20ஆம் கல்வி ஆண்டில் பெற்றனர்.

தற்போது 2020-21ஆம் கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவியர்கள் எம்பிபிஎஸ் மருத்துவக் கல்வியில் சேர்ந்து பயிலும் வகையில் இன்னர் வீல் டிஸ்ட்ரிக்ட் 323 (Inner Wheel District 323) மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு (CEG-80) ஆகியவை மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நீட் சிறப்புப் பயிற்சியினை 100 நாட்களுக்கு இலவசமாக அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு 'நீட் (NEET) என்னால் முடியும்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சிறப்புப் பயிற்சியினை ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார். சென்னை பள்ளிகளில் பயிலும் 101 மாணவ, மாணவியர்களைத் தேர்வு செய்ய சென்னை வடக்குப் பகுதி மாணவர்களுக்கு எம்.எச்.சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சென்னை தெற்குப் பகுதி மாணவர்களுக்கு புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியிலும் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் எம்.எச்.சாலை கல்வி மையத்தில் தேர்வு எழுதிய 103 மாணவ, மாணவியர்களில் 50 மாணவ- மாணவியர்கள், புலியூர் பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 130 மாணவ, மாணவிகளில் 51 மாணவிகள் என மொத்தம் 101 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குத் தக்க வல்லுநர்களைக் கொண்டு 100 நாட்களுக்கு முழுமையான நீட் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (கல்வி) ஸ்ரீதர், உதவி கல்வி அலுவலர்கள், இன்னர் வீல் டிஸ்ட்ரிக்ட் 323 பிரதிநிதிகள், கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x