Last Updated : 25 Feb, 2021 05:54 PM

 

Published : 25 Feb 2021 05:54 PM
Last Updated : 25 Feb 2021 05:54 PM

யார் துரோகம் செய்தது என்பதை புதுச்சேரி மாநில மக்கள் நன்கு  அறிவார்கள்: நாராயணசாமி மீது நமச்சிவாயம் விமர்சனம்

யார் துரோகம் செய்தது என்பதை புதுச்சேரி மாநில மக்கள் நன்கு அறிவார்கள் என, நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் இன்று (பிப். 25) நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:

"புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி எங்கள் மீது சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார். பாஜகவை அவதூறாகப் பேசுகிறார்.

இன்றைக்கு புதுச்சேரி மாநில மக்களுக்கு துரோகங்களைச் செய்துவிட்டு எங்களைப் பார்த்துக் கேட்கிறார் நீங்கள் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டு ஓடிவிட்டீர்கள் என்று. யார் துரோகம் செய்தது என்பதை புதுச்சேரி மாநில மக்கள் நன்கு அறிவார்கள்.

2016-ம் ஆண்டு தேர்தலில் எனக்கு துரோகம் செய்தீர்கள். அதன் பிறகு உங்களுக்காகத் தொகுதியை விட்டுக்கொடுத்து தியாகத்தைச் செய்த ஜான்குமாருக்கு துரோகம் செய்தீர்கள். உங்களுக்காகக் கட்சியில் இரவும் பகலும் பாடுபட்ட காங்கிரஸாருக்கும், உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்தீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் போற்றி வணங்கும் கட்சித் தலைமைக்கும் துரோகம் செய்துள்ளீர்கள்.

இத்தனை துரோகம் செய்துள்ள நீங்கள் எங்களைப் பார்த்து துரோகம் செய்ததாகக் கூறுகிறீர்கள். நாங்கள் துரோகம் செய்யவில்லை. புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்.

நான்கரை ஆண்டுகாலம் புதுச்சேரி மாநில மக்களுக்கும், இளைஞர்களுக்கும் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளீர்களா? எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை உங்களால் சொல்ல முடியுமா? அத்தனை வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு தற்போது மக்களுக்காகப் பாடுபடுவதைப் போல் நாடகம் ஆடுகிறீர்கள். உங்களுடைய பொய்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

உங்கள் தலைவருக்கே மொழிமாற்றம் செய்யும்போது பொதுமக்கள் மத்தியில் பொய்யைச் சொல்லத் துணிந்தீர்கள் என்றால், புதுச்சேரி மாநில மக்களுக்கு எந்த அளவுக்குப் பொய்யைச் சொல்லி இருப்பீர்கள். இதனை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி நான் மோடியையும் பார்ப்பேன், அவரது தாத்தாவையும் பார்ப்பேன் என்று பேசியுள்ளார். நான் நாராயணசாமிக்குப் பணிவுடன் சொல்வது, கிரண்பேடியையே உங்களால் சமாளிக்க முடியவில்லை. இந்தியா முழுவதும் ஆட்சி நடத்துகின்ற தலைவரை எப்படிச் சமாளிப்பீர்கள்?

புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உரையாற்றிவிட்டுச் சென்ற மோடி, தற்போது வருகின்றபோது நீங்கள் முன்னாள் முதல்வராக இருக்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய பூச்சாண்டிக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்".

இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x