Last Updated : 25 Feb, 2021 01:45 PM

 

Published : 25 Feb 2021 01:45 PM
Last Updated : 25 Feb 2021 01:45 PM

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை விரைவில் முடிக்கக் கோரி வழக்கு: சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கின் விசாரணையை விரைவில் முடிக்கக் கோரி ஜெயராஜ் மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், 2 சார்பு ஆய்வாளர்கள், ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், 5 காவலர்களை சிபிஐ போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜெயராஜ் மனைவி செல்வராணி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

"என் கணவர், மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கின் மீதான விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு 8 முறைக்கு மேல் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

டிசம்பர் 10-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் உறவினரின் செல்போனில் யாரிடமோ பேசி ரூ.36 லட்சம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்தார். இது நீதித்துறை நடுவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட போலீஸாரும், அவர்களின் பாதுகாப்பு போலீஸாரும் செய்தியாளர்களை மிரட்டி மோசமான வார்த்தைகளால் திட்டினர். பண பலம், ஆட்கள் பலம் காரணமாக சாட்சிகளை மிரட்டி, கலைப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் என் கணவர், மகன் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும்".

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி முரளி சங்கர் விசாரித்து, மனு தொடர்பாக சிபிஐ கூடுதல் எஸ்.பி. பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விசாரணை ஒத்திவைப்பு

இதனிடையே ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்ற நீதிபதி தாண்டவன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர் உள்பட 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையும் மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x