Published : 25 Feb 2021 03:14 AM
Last Updated : 25 Feb 2021 03:14 AM

செல்ஃபி எடுக்கலாம்.. மலரஞ்சலி செலுத்தலாம் ஜெ. நினைவிடத்தில் அருங்காட்சியகம், மெய்நிகர் பூங்கா: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சி யகம் மற்றும் அறிவுசார் பூங்கா ஆகியவற்றை முதல்வர் பழனி சாமி திறந்து வைத்தார். இங்கு,ஜெயலலிதாவுடன் செல்ஃபிஎடுத்தல், மலர் அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம் சங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர்5-ம் தேதி காலமானார். அவரதுஉடல், மெரினா கடற்கரையில்உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு ரூ.79.75 கோடியில் பீனிக்ஸ்பறவை வடிவில் நினைவிடம், அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா நினைவிடத்தை கடந்த ஜனவரி 27-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காஆகியவற்றுக்கான பணிகள்தொடர்ந்து நடந்து வந்ததால்,நினைவிடத்தை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், பெரும்பான்மை பணிகள் முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினமான நேற்று அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். இங்கு நவீன தொழில்நுட்பத்தில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய் யப்பட்டுள்ளன.

அருங்காட்சியகம்

அருங்காட்சியகத்தில் அரக்குநிற சேலை, ஷூ ஆகியவற்றை அணிந்த நிலையில் ஜெயலலிதாவின் மெழுகு சிலை அமைக்கப் பட்டுள்ளது. அருங்காட்சியக சுவரின் ஒருபுறம் சிறுவயது முதல்முதல்வர் ஆனது வரை ஜெயலலிதாவின் ஒவ்வொரு படிநிலை குறித்த புகைப்படங்கள் வைக்கப் பட்டுள்ளன. எதிர்வரிசையில், அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான படங்கள், அவற்றுக்கான விளக்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

‘அம்மாவின் சாதனை மைல்கல்’ என்ற தலைப்பில் ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகள் குறித்தவிளக்கங்களும் இடம்பெற்றுள் ளன. தொடு கணினியில் சாதனைதொடர்பான தலைப்பை தொடும்போது, கிராஃபிக்ஸில் அந்த சாதனை குறித்த விவரங்கள் படமாக திரையில் தோன்றுகிறது.

இதுதவிர, கேள்வி - பதில் என்ற பகுதியில், கேள்வியை நாம் பதிவு செய்தால், அதற்கு ஜெயலலிதாவே வந்து பதில் சொல்லும் வகையில் மெய்நிகர் காட்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘அம்மா உரையாடல்’ என பெயரிடப்பட்டுள் ளது.

மெய்நிகர் பூங்கா

ஜெயலலிதாவின் குழந்தை பருவம், சினிமா, தொடக்க அரசியல்என்ற 3 தலைப்பின்கீழ், 70 விநாடிகள்ஓடும் வீடியோ, மெய்நிகர் பூங்காவில் திரையிடப்படுகிறது. இதில் ஜெயலலிதாவின் குழந்தை பருவம்தொடர்பான அரிதான புகைப்படங்களும், அதிமுக உறுப்பினர் அட்டை பெற்றது உள்ளிட்ட விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

ஜெயலலிதாவுடன் செல்ஃபி

‘பிளே அண்டு வின்’ என்ற பகுதியில் 20 கேள்விகள் இருக்கும். அந்த கேள்விகளுக்கு சரியான பதில்சொன்னால் ஜெயலலிதா நேரில் வந்து கைதட்டுவது போன்று மெய்நிகர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல்,‘செல்ஃபி வித் அம்மா’ என்ற பகுதியில், ஜெயலலிதா படம் தோன்றும்.அதன் அருகில் நின்று கையசைத்தபின், அருகில் உள்ள தொடுதிரையில் நமது தொலைபேசி எண்ணைபதிவிட்டால், அந்த எண்ணுக்கு ஜெயலலிதாவுடன் எடுத்த செல்ஃபிபடம் அனுப்பி வைக்கப்படும். பள்ளி மாணவிக்கு ஜெயலலிதா மடிக்கணினி வழங்குவது போன்றமெழுகுச்சிலையும் மிக நேர்த்தியாக வடிவமைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மலரஞ்சலி

இதுதவிர ஜெயலலிதாவுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் வகையில் மெய்நிகர் அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், மலர்கள்மற்றும் அவற்றுக்கான நிறத்தைதேர்வு செய்து பதிவு செய்தால்,அந்த மலர்கள் ஜெயலலிதா மீதுவிழுவது போன்றும், அப்போதுஅவர் கண்சிமிட்டி சிரிப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நாம் தேர்வு செய்த மலரின் வாசத்தையும் நுகர முடியும். இந்த அமைப்புகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தாலும், அவற்றின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதால், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x