Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

குறிச்சிக்கோட்டை கிராமம் ஊராட்சியா? பேரூராட்சியா? - மாறுபட்ட ரசீது விநியோகத்தால் குழப்பம்

உடுமலை

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை ஊராட்சி உள்ளது. கடந்த சில நாட்களாக ஊராட்சியில் வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்தும் பொதுமக்களிடம் இரு விதங்களில் ரசீது விநியோகிக்கப்பட்டுவருகிறது. இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வரி செலுத்தியபோது ஊராட்சி எனவும், குடிநீர் கட்டணம் செலுத்தியதற்கு பேரூராட்சி எனவும் ரசீது விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “குறிச்சிக்கோட்டை ஊராட்சி என்பது அனைவரும் அறிந்த விஷயம். பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் எனில் அதற்கு அரசாணை பிறப்பிக்க வேண்டும். ஆனால் அரசாணை இன்றி பேரூராட்சி ரசீது விநியோகிக்கப்படுவது முறைகேடானது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, விரைவில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும், ஆகவே ரசீது அவ்வாறாக விநியோகிக்கப்படுவதாகவும் ஊராட்சிப் பணியாளர்கள் பதில் அளிக்கின்றனர்’’ என்றனர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தம் கூறும்போது, “குறிச்சிக்கோட்டை கிராமம் ஊராட்சியாகத்தான் உள்ளது. பேரூராட்சியாக மாற்ற எந்த திட்டமும் இல்லை. பேரூராட்சி என ரசீது விநியோகிக்கப்பட்டிருப்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x