Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்காததால் ஏமாற்றம்: மதுரையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண மக்கள் விருப்பம்

கோப்புப்படம்

மதுரை

தமிழக நிதிநிலை அறிக்கையில் கோவைக்கு மட்டும் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்துவிட்டு மதுரையைப் புறக்கணித்துள்ளது மதுரை உட்பட தென்மாவட்ட மக் களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் 2021-22 குறித்து முதல்வர் கே.பழனிசாமி வெளி யிட்ட அறிக்கையில், ‘‘கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர ஒப்புதல் வழங்க வேண்டும்’’ என்று மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார். ஆனால் தமிழக அரசின் இந்த இடைக்கால பட்ஜெட்டில் கோவைக்கு மட்டும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க ரூ.6,683 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்படவில்லை.

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மக்கள் நெரிசலும், போக்குவரத்து நெரிசலும் அதிகம் உள்ள மாநகரமாக மதுரை உள்ளது. அதோடு உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில், உயர்நீதிமன்ற மதுரை கிளை, சர்வதேச விமான நிலையம் போன்றவை உள்ளதால் தினசரி வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்துசெல்வோரின் எண்ணிக்கையும் அதிகம். மேலும் விரைவில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும் வரும்பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். 20 லட்சத் துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மதுரைக்கு தமிழக பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்காதது தென்மாவட்ட மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே பயணிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் பத்மநாபன் கூறுகையில், ‘‘கோவையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த இக்கட்டான கரோனா நிதி நெருக்கடியிலும் ரூ.6683 கோடியில் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்துள்ளார்கள். ஆனால் மதுரையைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், இதுபோன்ற திட்டத்தை வலியுறுத்தாததால் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கிடைக்கவில்லை. மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தின் அவசியம் பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு ரயில்வே பயணிகள் சார்பில் மனு அளிக்க உள்ளோம்’’ என்றார்.

தொழில் வர்த்தகச் சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் கூறு கையில், ‘‘தென்தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. மதுரையில் கோவையைவிட போக்குவரத்து நெரிசல் அதிகம். மதுரையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வது எளிதான காரியம் இல்லை. மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவிக்க 10 லட்சம் மக்கள் தொகை போதும். ஆனால் மதுரையில் 20 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இப்படி எல்லா வகையிலும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவிப்பதற்கான சாதக அம்சங்கள் நிறைந்துள்ளன. மத்திய அரசு 2025-ம் ஆண்டுக்குள் 25 நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

மொத்தத் திட்ட நிதியில் 50 சதவீதத்தை மாநில அரசு ஏற்றுக் கொண்டு பரிந்துரை செய்தால் மத்திய அரசு உடனே ஏற்றுக்கொள்வதாகவும், மீதி தொகையையும் தருவதாகவும் தெளிவாகக் கூறியிருக்கிறது. அதனால் தமிழக அரசு மது ரைக்கும் சேர்த்து மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x