Last Updated : 24 Feb, 2021 08:12 PM

 

Published : 24 Feb 2021 08:12 PM
Last Updated : 24 Feb 2021 08:12 PM

மதுரை காமாஜர் பல்கலை. பதவி உயர்வு முறைகேடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதவி உயர்வு முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த லயோனல் அந்தோணி ராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மே 2017 முதல் ஜூன் 2018 வரை செல்லத்துரை துணைவேந்தராக இருந்த போது தகுதியற்ற பலருக்கு உதவி பேராசிரியர், பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர்அலி குழு விசாரித்தது.

இந்த குழு விசாரணை நடத்தி பதவி உயர்வு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக அறிக்கை அளித்தது. இந்த அறிக்கை அடிப்படையில் முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணை வேந்தருக்கு சிண்டிகேட் அதிகாரம் வழங்கியது. இருப்பினும் இதுவரை நடவடிக்கையும் இல்லை.

எனவே, பதவி உயர்வு முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்வுக்கு தடை விதித்தும், உயர் மட்டக்குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பல்கலைக்கழகம் தரப்பில், உயர்மட்டக் குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரத்தை துணைவேந்தருக்கு சிண்டிகேட் கொடுத்துள்ளது. அவர், புகாரில் சம்பந்தப்பட்டவர்களின் சான்று மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய குழுவை அமைத்துள்ளார். அந்த ஆய்வுக்குழு அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பதவி உயர்வு முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் தற்போதை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x