Last Updated : 24 Feb, 2021 07:07 PM

 

Published : 24 Feb 2021 07:07 PM
Last Updated : 24 Feb 2021 07:07 PM

நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணி 18 மாதங்களில் முடியும்: உயர் நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை தகவல்

மதுரை

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணி 18 மாதத்தில் முடியும் என உயர் நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தென்காசியைச் சேர்ந்த ராஜசேகர பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

நெல்லை முதல் தென்காசி வரை சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழி சாலை அமைக்க ரூ.412 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் 2018 ஜூலை மாதம் தொடங்கி 2020 செப்டம்பரில் முடிவடைய வேண்டும்.

ஆனால் தற்போது வரை நான்கு வழிச்சாலை பணி முடிவடையவில்லை. நிலம் கையகப்படுத்தப்படும் பணி முடிவடைந்துள்ளது. சாலையின் இரு பக்கங்களிலும் வளர்ந்திருந்த சுமார் 1400 மரங்களை அகற்றி உள்ளனர். இருப்பினும் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கவில்லை.

நெல்லை- தென்காசி சாலையில் ஏராளமான அபாயகரமான வளைவுகள் உள்ளன. பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் குறுக்கிடுகின்றன. எனவே, திருநெல்வேலி முதல் தென்காசி வரை நான்கு வழிச்சாலைச் பணியை விரைவில் முடிக்க உத்தரவிட வேண்டும்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் இ.பினேகாஸ் வாதிட்டார்.

நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், நெல்லை- தென்காசி நான்கு வழி்ச்சாலைப்பணி 18 மாதங்களில் முடிவடையும் எனக் கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x