தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை பணம் எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கோரி வழக்கு

தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை பணம் எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கோரி வழக்கு
Updated on
1 min read

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின், ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கோரி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, ரூ.50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாகக் கொண்டு செல்லக்கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஒப்பந்ததாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால், எதிர்வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போது, அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாகக் கொண்டு செல்ல அனுமதிக்கக் கோரி, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசுத் துறை பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களிடம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பணியாளர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்க வேண்டியுள்ளதாகவும், அதற்காகக் குறைந்தது 2 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாகக் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகவும், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், பணத்தைக் கொண்டு செல்ல முடியாது என்பதால், 2 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாகக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவைப் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in