Published : 24 Feb 2021 01:07 PM
Last Updated : 24 Feb 2021 01:07 PM

'நன்றி மறப்பது நன்றன்று'- சசிகலாவைச் சந்தித்த பின் சரத்குமார் பேட்டி

'நன்றி மறப்பது நன்றன்று' என்று சசிகலாவைச் சந்தித்த பின் சரத்குமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 24) கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சசிகலா. அவரது வீட்டுக்குச் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமார், அவரின் மனைவி ராதிகா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

அதன் பின்னர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''சசிகலாவின் உடல் நலனை விசாரிப்பதற்காக இங்கு வந்துள்ளோம். கரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ள அவரை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வந்தோம். ஏற்கெனவே அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தபோது தொலைபேசி மூலமாகப் பேசினேன். கடந்த 10 ஆண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நாங்கள் ஜெயலலிதாவைச் சந்திக்கும் போதெல்லாம் சசிகலா உடன் இருந்திருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை 'நன்றி மறப்பது நன்றன்று' என்ற எண்ணத்தின் அடிப்படையில், நாங்கள் பயணித்த காலங்களை நினைவுகூறி சசிகலாவுடன் பேசிக் கொண்டிருந்தோம். மீண்டும் அவர் மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்தேன். நாங்கள் ஒரு குடும்பத்தைப் போல இருந்திருக்கிறோம். அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் தெரியும். உடல்நலம் மற்றும் மரியாதை நிமித்தமாகவே சசிகலாவைச் சந்தித்துள்ளேன்.''

இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.

ராதிகா சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சசிகலாவை ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாகத்தான் எனக்குத் தெரியும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x