Published : 24 Feb 2021 03:16 AM
Last Updated : 24 Feb 2021 03:16 AM

மின்கட்டண மானியமாக ரூ.8,414 கோடி ஒதுக்கீடு: பேருந்துகள் வாங்க ரூ.623 கோடி

கோவையில் ரூ.6,683 கோடி மதிப்பில் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படும் என தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

சென்னையில் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில், 118.90 கி.மீட்டர் நீளத்தில் 3 வழித்தடங்கள் அடங்கிய, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் 44 கி.மீட்டர் நீளமுள்ள கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

12 ஆயிரம் பேருந்துகள்

போக்குவரத்துக் கழகத்துக்கு அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதில், 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளும் அடங்கும். முதற்கட்டமாக, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.1,580 கோடி செலவில் 2,200 பிஎஸ்-6 பேருந்துகளும், 500 மின்சாரப் பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும். இதற்காக, 2021-22-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக, 2021 ஜனவரி மாதம் வரையில் மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.3,717.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ஏற்பட்டுவரும் கடுமையான நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, 2020-21ம் ஆண்டில் திருத்த மதிப்பீடுகளில் மின்கட்டண மானியமாக ரூ.8,413.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவு திட்டத்தில், மானியக் கட்டணங்களுக்காக ரூ.8,834.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உதய் திட்டத்தின் கீழ், 5 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன்களை மானியமாக மாற்றுவதற்கான 5-வது மற்றும் இறுதிக் கட்ட மானியமாக ரூ.4,536 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அத்துடன், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ஏற்பட்டு உள்ள இழப்புகளை ஈடு செய்யும் விதமாக, உதய் திட்டத்தின் வழிமுறைகள் படி, ரூ.7,217.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக, பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் இருந்து ரூ.37,130.30 கோடி மதிப்பில் கடன்களைப் பெறுவதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்கி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x