Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

உள்நாடு, வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க நிதி தொழில்நுட்ப நகரம் உருவாக்கம்: சென்னைக்கு அருகில் காவனூரில் அமைகிறது

நிதி தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதற்கு சென்னை அருகில் உள்ள காவனூரில் நிதி தொழில்நுட்ப நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இருந்து இன்றைய நாள் வரையில் கையெழுத்திடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கி 191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. மொத்தம் 89 சதவீதம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை தொடர்ந்து தமிழகம் ரூ.1 லட்சத்து 8,913 கோடி முதலீட்டு மதிப்பில் 2 லட்சத்து 55,633 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 166 திட்டங்களை ஈர்த்துள்ளது.

கரோனா பெருந்தொற்றின்போது அனைத்திந்திய அளவில் அதிக எண்ணிக்கையில் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. 1 லட்சத்து 69,496 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக ரூ.88,727 கோடி மதிப்பில் முதலீடுகளுக்கான 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. முதல்வர் தலைமையின் கீழ் உயர்நிலை குழு 71,766 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக ரூ.39,941 கோடி மதிப்பில் 62 முதலீட்டு திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதற்கு சென்னை அருகில் உள்ள காவனூரில் நிதி தொழில்நுட்ப நகரத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் தோராயமாக 260 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கி வருகிறது. புதிய நிதி தொழில்நுட்பக் கொள்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான உலக அளவில் ஒரு மையமாக சென்னை உருவாக வழி வகுக்கும்.

டாக்டர் சி.ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு கடன் வழங்கும் நிறுவனமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்துவதற்கும் அதன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கும் கூடுதல் மூலதனமாக ரூ.1,000 கோடியை அரசு வழங்கும். இதற்காக 2021-22-ம்ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2021-22-ம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.1,224.26 கோடி கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கள்ளப்பாளையத்தில் ஒரு புதிய தொழிற்பூங்காவை உருவாக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x