Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

பட்டப்படிப்பை மட்டும் தமிழ்வழியில் படித்தால் இடஒதுக்கீடு இல்லை: மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பட்டப்படிப்பை மட்டும் தமிழ் வழியில் படித்தால் இடஒதுக்கீடு வழங்க முடியாது எனக் கூறிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, இட ஒதுக்கீடுக்கான சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருச்சியைச் சேர்ந்த சன்மதி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசுப் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட படிப்பை மட்டும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் வழிக்கல்விச் சலுகைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி இனி அரசுப் பணிக்கு 10 2 3 முறையில் தமிழ் வழியில் கல்வி படித்தவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படும்.

இதனால் சட்டத் திருத்தத்தை ரத்து செய்து, முன்பிருந்ததுபோல் அரசுப் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட படிப்பை மட்டும், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீட்டு சலுகை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ். ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதிகள், தமிழ் வழிக் கல்விச் சலுகைச் சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், விதிமீறல் இருந்தால் மட்டுமே தலையிட முடியும்.

சட்டம் திருத்தப்படுவதற்கு முன்பு அமலில் இருந்த நடைமுறை தவறானது. 10-வது, பிளஸ் 2, கல்லூரி என்ற அடிப்படையில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு மட்டும் தமிழ் வழிக்கல்விச் சலுகை வழங்க வேண்டும் என்ற தற்போதைய நடைமுறை சரியானது.

அப்படி வழங்கினால்தான் ஏழை மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் பலன் பெற முடியும். மனுதாரர் தமிழ் வழிக்கல்வி சலுகை பெற வேண்டும் என்பதற்காக கல்லூரிப் படிப்பை மட்டும் தமிழ் வழியில் படித்துள்ளார். அவருக்கு எப்படி தமிழ் வழிக் கல்விச் சலுகை வழங்க முடியும். எனவே தமிழக அரசின் சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது இல்லை. விதிமீறலும் இல்லை.

அரசுப் பள்ளியில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெறவே இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ் மொழியையும் பாதுகாக்க வேண்டும். எனவே மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x