Last Updated : 24 Feb, 2021 03:17 AM

 

Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

பிரச்சாரத்தை தொடங்கிய பாஜக- மதுரையில் அதிமுகவினர் அதிர்ச்சி

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 7-ல் அதிமுகவும், 3-ல் திமுகவும் வெற்றி பெற்றன. இந்தத் தேர்தலில் மதுரை வடக்கு, கிழக்கு, தெற்கு தொகுதிகளை பாஜக கேட்டு வருகிறது. அதேநேரத்தில் மதுரை தெற்கு, கிழக்கில் பாஜக தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது.

மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட முடிவு செய்து, பாஜக மாநில துணைத் தலைவரும் மத்திய மின் தொகுப்பின் தனி இயக்குநராகவும் இருந்து வரும் ஏ.ஆர்.மகாலெட்சுமி தொகுதிக்குள் நல உதவிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

‘மதுரை கிழக்கே, தாமரையின் இலக்கு’ என்ற பெயரில் கிழக்குத் தொகுதியில் மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

பாஜக மாநிலப் பொதுச் செயலர் னிவாசன் தனக்காக மதுரை வடக்கு தொகுதியைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பாஜக 3 தொகுதிகளைக் கேட்டாலும் ஒரு தொகுதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அது எந்தத் தொகுதி என்பது தொகுதிப் பங்கீட்டின்போது தான் தெரியும்.

ஆனால், மதுரை தெற்கு தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்தைத் திறந்து பிரச்சாரத்தைத் தொடங்கி அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. தெற்கு தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை பாஜக தலைவர் எல்.முருகன் திறந்து வைத்தார்.

முன்னதாக திறந்த ஜீப்பில் முருகன் அழைத்து வரப்பட்டார். அவருடன் ஏ.ஆர்.மகாலெட்சுமி வேட்பாளர் போல் நின்று கொண்டிருந்தார்.

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் கூட தொடங்கப்படாத நிலையில், மதுரை தெற்கு தொகுதியில் பாஜக போட்டியிடுவதுபோல் அலுவலகம் திறந்து பிரச்சாரம் செய்துள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x