Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

நாமக்கல்லில் வருவாய், காவல்துறையினருடன் ஆலோசனை: பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிய ஆட்சியர் உத்தரவு

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணியினை மேற்கொள்ள வேண்டும், என தேர்தல் அலுவலர்களுக்கு நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2,135 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் இணைந்து சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணியினை மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளில் பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் குறித்த விவரங்களை வாக்குச்சாவடி வாரியாக சேகரிக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடிகளில் காற்றோட்ட வசதி, மின் விளக்கு மற்றும் குடிநீர் வசதி, வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும்.

சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அலுவலர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும், என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மு.கோட்டைக்குமார், ப. மணிராஜ், வீ.சக்திவேலு, மோகனசுந்தரம், மு.மரகதவள்ளி, வே.ரமேஷ், தேர்தல் வட்டாட்சியர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x