Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எருதுவிடும் விழாவில் காளைகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி உற்சாகம்

சூளகிரி அருகே சீபம் கிராமத்தில் நடந்த எருதுவிடும் விழாவில் சீறிப் பாய்ந்த காளைகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சீபம் கிராமத்தில் நேற்று எருதுவிடும் விழா நடந்தது. இதில், சூளகிரி, ராயக்கோட்டை, தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி மற்றும் கர்நாடக மாநில எல்லையோரக் கிராமங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் வாகனங்களில் அழைத்து வந்தனர்.

காளைகள் அலங்கரிக்கப்பட்டு, அதன் கொம்புகளில் விதவிதமான தட்டிகளைக் கட்டினர். இதனைத் தொடர்ந்து காளைகளுக்கு கோ-பூஜை நடந்தது. இவ்விழா வினை கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் தொடங்கி வைத்தார். காளைகள் விழா திடலில் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.

ஹெலிகாப்டர் மூலம் காளைகள் மீது மலர்கள் தூவப்பட்டது. இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் உற்சாகம் அடைந்தனர். இவ்விழாவில் சீறிப் பாய்ந்த காளைகளின் கொம்பில் கட்டப்பட்டிருந்த தட்டிகளை இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு பறித்தனர். எருது விடும் விழாவில் 5 இளைஞர்கள் காயமடைந்தனர். இவ்விழாவைக் காண சூளகிரி, உத்தனப்பள்ளி, சீபம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டிருந்தனர். தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா தலைமையில் உத்தனப் பள்ளி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x