Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

புறம்போக்கு இடப்பிரச்சினையில் கல்வராயன்மலையில் விவசாயி கொலை

கள்ளக்குறிச்சி

கல்வராயன் மலையில் முதியவரை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் மட்டப்பாறையைச் சேர்ந்த முதியவர் சடையன்(85) என்பவர் புதூர் என்ற கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் 80 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து விவசாய நிலமாக பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் மட்டப்பாறை கிராம மக்கள், அவர் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலத்தில் கோயில் கட்டவேண்டும் எனக் கூறியுள்ளனர். இதற்காக நிலத்தை திரும்ப வழங்குமாறும் கேட்டுள்ளனர். அதற்கு சடையன் மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் கிராம மக்கள் நிலத்தை பொக்லைன் இயந்திரம் கொண்டு சமன் செய்துள்ளனர். இதையறிந்த சடையன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சின்னபையன் என்பவரை சடையன் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சடையனை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சடையன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது தொடர்பாக கச்சிராயப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பையன்(65), பழனி(30) மற்றும் மூர்த்தி(27) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

காலதாமதம் செய்த போலீஸார்

நிலம் மீட்பு தொடர்பாக அப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக பிரச்சினை நிலவி வந்தது.

இதுகுறித்து அப்பகுதி தனிப்பிரிவு காவலருக்கு தகவல் தெரிந்தும், அவர் காவல் நிலையத்திற்கு முறையான தகவல் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இச்சம்பவம் நீடித்து, கைகலப்பில் தொடங்கி கொலையில் முடிந்ததாக அப்பகுதி மக்கள் காவல்துறை மீது குற்றம் சாட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x